புற்றுநோயை உருவாக்கும் பஞ்சுமிட்டாய்.. ஆய்வில் தெரிய வந்த உண்மை
புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்யில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுடித்து பறிமுதல் செய்துள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் இதுபோன்ற பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்யும் 30க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்களை தேடும் பணியில் உணவு பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை வாங்கி சோதனை செய்தனர்.
இதையும் படிக்க.. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகம்?: மத்திய அரசு பதில்
அதில் ரோடமின் பி(RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து இன்று பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன் அவர்களில் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரியில் 30 வட மாநில இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவது தெரிவதைத் தொடர்ந்து அவர்களுடைய விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் (FSSAI)அனுமதி அளித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நிர்ணயை பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறையினர் பஞ்சுமிட்டாய் விற்பனையாளர்களுக்கு தெரிவித்தனர். இது குறித்து தன்வந்தி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில இளைஞர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.