கோவையில் பில்லூா் 3-வது குடிநீா்த் திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்து, 8 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 11) வழங்கவுள்ளார்.
கோவை மாநகராட்சி மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ. 780 கோடி மதிப்பில் பில்லூா் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள், கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த அன்னூா், சூலூா் அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.362.20 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஆகிய பணிகளை கோவை, சரவணம்பட்டி குமரகுரு பொறியியல் கல்லூரி அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.
இதைத் தொடா்ந்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். இவ்விழாவானது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில், வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: பாரமரிப்புப் பணி: 44 மின்சார ரயில்கள் ரத்து
இவ்விழாவில், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், பல்வேறு அரசு துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.