தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஸை, அக்கட்சியின் பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளில் அதிமுக பொதுக்குழுவின் தீர்மானத்துக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்து அதிமுக அறிவித்தது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் இருக்கையை உதயகுமாருக்கு வழங்கக் கோரி அதிமுக தரப்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு 4 முறை கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய கேள்வி நேரத்துக்கு பிறகு ஓபிஎஸ்ஸின் இருக்கை மாற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி பேரவையிலேயே கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் இருக்கையை மாற்றம் செய்து எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை உதயகுமாருக்கு இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமியின் பின்பு இரண்டாவது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் 207-ஆம் எண் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.