அடுத்த வாரத்தில் 100% லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்படும்
அடுத்த வாரத்தில் 100 சதவிகிதம் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 1622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் (NABL) சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இது மிக முக்கியமான நாள்.
2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் சென்னை நீங்கலாக மற்ற ஊர்களில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை பரிசோதனை கூடங்கள் உள்ளது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட 29 வகையான பரிசோதனைகள் இதில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் இந்திய தர கவுன்சிலின் ஒரு அங்கமாக உள்ளது. அதில் தரச் சான்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியது. அதில் முதன் முதலாக தமிழ்நாட்டில் இந்த அங்கீகார சான்றிதழ் 1622 ஆய்வகங்களுக்கு கிடைத்துள்ளது.
ஒட்டு மொத்த தமிழர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பெருமை. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
332 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கும் எம்.ஆர்.பி. மூலம் நாளை சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது. அடுத்த வாரத்தோடு தமிழகத்தில் 100 சதவிகிதம் லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதற்குப் பின் கலந்தாய்வு நடைபெற்று, பின்னர் பணி ஆணைகள் வழங்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.