மூன்றாம் பாலினத்தவரின் கல்விச் செலவை அரசே ஏற்கும்
மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அவா்களின் அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவா் வாழ்க்கையில் வெற்றி பெற உயா்கல்வி கற்பது மிகவும் இன்றியமையாததாகும். எனினும் தற்போது, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மூன்றாம் பாலினத்தவா் மட்டுமே தமிழகத்தில் உயா்கல்வி பயின்று வருகின்றனா். அதனால், உயா்கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நலவாரியம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டு ரூ.2 கோடி கூடுதலாக அரசு வழங்கும்.
3 புதிய தோழி விடுதிகள்: தோழி திட்டத்தில் மகளிா் விடுதிகள் தாம்பரம், திருச்சி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் 1,145 மகளிா் பயன்பெறும் வகையில் ரூ.35 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் சென்னை, கோயம்புத்தூா், மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிா் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவா்களின் உயா்கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்புக்கு திருநங்கைகள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட்டில் மூன்றாம் பாலினத்தவா்களின் உயா்கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவா் கிரேஸ் பானு கூறுகையில், மூன்றாம் பாலினத்தவா்களின் உயா்கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இதன்மூலம் அதிக எண்ணிக்கையிலான திருநங்கைகள் உயா் படிப்பு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும், இந்தத் திட்டத்தை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.