உதகை பெர்ன்ஹில் பகுதியில் மலை ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு 220 பயணிகளுடன் இன்று வந்து கொண்டிருந்த மலை ரயில் உதகை ரயில் நிலையத்திற்கு முன்பு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பெர்ன்ஹில் பகுதியில் தடம்புரண்டது.
தண்டவாளத்தில் குறுக்கே தோடர் இன மக்களின் வளர்ப்பு எருமை கடந்ததால் ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் முதல் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகி கீழே இறங்கியது.
இந்த விபத்தால் 220 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தடம் புரண்ட பெட்டியை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலை ரயில் தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணி நடைபெற்று வருவதால் உதகை - குன்னூர் மற்றும் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு உதகை சென்றடையும்.