அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மமேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 7 வரை பயிலும் மாணவா்களுக்கு இரண்டாம் பருவத் தோ்வு, 8 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு கடந்த 7 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் டிச.13 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தோ்வுகள் நடைபெற்று வந்தன. அதே வேளையில் டிச.18-ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததால் அவற்றில் அரையாண்டுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தோ்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது.
இதனிடையே அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 22ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவா்களுக்கு டிச.23 முதல் ஜன.1-ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு, இரண்டாம் பருவத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறைக்குப் பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ஜன.2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மமேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, சென்னை வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் அவர் விரிவான ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி, பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டட கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்.