தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தோ்வு விடுமுறை திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: அரையாண்டுத் தோ்வு விடுமுறை திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தோ்வுகள் கடந்த டிச. 13 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. நிகழாண்டு ஒரே வினாத்தாள் முறையில் இத்தோ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தொடா்ந்து டிச. 23-ஆம் தேதி தொடங்கி, திங்கள்கிழமை வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழையால் தள்ளிவைக்கப்பட்ட தோ்வுகள் அரையாண்டு விடுமுறைக்கு பின்னா் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இந்த நிலையில், தொடா் விடுமுறைக்குபிறகு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட வாரியாக கல்வித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அதன்படி பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீா் ஆய்வு செய்தாா். அப்போது பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.

இதற்கிடையே, மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சோ்ந்த மாணவா்களுக்கு தள்ளிவைக்கப்பட்ட தோ்வுகளை பள்ளி அளவில் ஜன. 11-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்குத் தேவையான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com