தமிழகத்தின் கோரிக்கை அரசியல் முழக்கமல்ல.. மு.க. ஸ்டாலின்

தமிழகத்தின் கோரிக்கை என்பது அரசியல் முழக்கமல்ல, மக்களுக்கானது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தின் கோரிக்கை அரசியல் முழக்கமல்ல.. மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

திருச்சி: தமிழகத்தின் கோரிக்கை என்பது அரசியல் முழக்கமல்ல, மக்களுக்கானது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசினார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் புதிய முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புது தில்லியில் இருந்து திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

பிறகு, திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

புதிய முனையம் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். முதல்வரின் உரையில், சென்னை  மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உடனே நிதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளை செய்து தரும் முக்கிய கடமை மாநில அரசுக்குத்தான் உள்ளது. தமிழகத்தின் கோரிக்கை என்பது அரசியல் முழக்கமல்ல, மக்களுக்கானது. நெடுஞ்சாலை துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையம், தமிழகத்தின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமாகும். பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும், ஏராளமான மக்கள் நாள்தோறும் மதுரை வந்து செல்வதால், மதுரை விமான நிலையத்தையும் பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், சென்னை விமான நிலையத்திலிருந்து சென்னை - பினாங், சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன். மேலும், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

திருச்சி பெல் நிறுவனத்தை நம்பி இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து உள்ளது - இதனை கருத்தில் கொண்டு பிரதமர் பெல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சிறு, குறு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.நெல்லை, தூத்துகுடியில் நடந்த பேரிடரை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com