பட்டுக்கோட்டை ஆணவக்கொலை: பெண்ணின் பெற்றோருக்கு 15 நாள்கள் காவல்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே கலப்புத் திருமணம் செய்த மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கலப்புத் திருமணம் செய்த இளம்பெண்ணை கொலை செய்து சடலத்தை எரித்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து பெண்ணின் பெற்றோரை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பூவளூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா(19), இவரும் பூவளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீனும் (19) திரூப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த நவீன், மாற்று சமூகத்தை சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் கடந்த டிச.31 ஆம் தேதி கலப்புத் திருமணம் செய்துகொண்டு திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டியில் வசித்து வந்தனர்.
அவர்களது திருமண நிகழ்வு கட்செவி அஞ்சல் வழியே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் கடந்த 2- ஆம் தேதி பல்டம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து, காவலர்கள், அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினார்கள் துன்புறுத்திக் கொலை செய்து எரித்து விட்டதாக நவீனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நவீன் வாட்டத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடந்த திங்கள்கிழமை பூவளூர் மற்றும் நெய்வவிடுதி பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் ராவத்பலத்த பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா இருவரையும் பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.