வழக்கமாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் விரைவு ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்களின் ஒரே தேர்வு ஆம்னி பேருந்துகள்தான்.
அதாவது பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாள்களில் சென்னையிலிருந்து ஆம்னி பேருந்துகளில் நாள்தோறும் சராசரியாக 65 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என்பது புள்ளிவிவரம்.
அந்த வகையில், வழக்கமான கட்டணங்களை அந்த நாள்களில் பின்பற்றாமல், அதிகபட்ச கட்டணங்களை விசூலித்து, பயணிகளின் பண்டிகையை கசப்பானதாக மாற்றிவிடுவார்கள் ஆம்னி பேருந்து நிறுவனத்தார்.
ஆனால், ஆம்னி பேருந்துகளுக்கும் அதிகபட்ச விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தீபாவளி பண்டிகை முதல் இது அமலுக்கு வந்து தற்போது நடைமுறையிலும் உள்ளது.
இதனை பெரும்பாலான ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீறவில்லை என்றே கூறப்படுகிறது. அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமை வரை ரூ.900 முதல் 2,900 வரை தான் பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது, தனியார் பேருந்து முன்பதிவு செயலிகளாக அபி பஸ், ரெட் பஸ், மேக் மை டிரிப் போன்றவற்றின் ஆன்லைன் புக்கிங் மூலம் தெரிய வந்துள்ளது.
விழாக்காலங்களில் சென்னையிலிருந்து குளிர்சாதன வசதிகொண்ட பேருந்துகளில் நெல்லை, மதுரை, கோவை செல்வதாக இருந்தால் ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், தற்போது அனைத்து வகை பேருந்துகளிலும் 3 ஆயிரத்துக்கு மிகவில்லை.
விழாக்காலங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால், கடந்த தீபாவளி முதல் அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அது பொங்கலுக்கும் நடைமுறையில் உள்ளதால், பயணிகள் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இது தவிர, எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளில் சுமார் 1.2 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் 1.2 - 1.5 பேர் அரசுப் பேருந்துகளில் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.