பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு ஒத்திவைப்பு

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்

விழுப்புரம்: முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.19) ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக அப்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கண்ணன் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர்.

வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு இரு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை (ஏககாலம்) எஸ்.பி. கண்ணனுக்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், இந்த மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்ததால்,  டிசம்பர் 19, ஜனவரி 6ஆகிய தேதிகளில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை ஜனவரி 9-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் விசாரணையை தொடர்ந்து நடத்தி, ஜனவரி 24-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அப்போது விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் கூறிய முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, அன்றைய தினத்தில் ராஜேஷ்தாஸ் தரப்பில் வாதிடுவதற்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தவழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.19) ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com