கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்கம்; விழா மேடையில் பிரதமர், முதல்வர்

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்கம்; விழா மேடையில் பிரதமர், முதல்வர்

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இன்று கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன.

இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. பிரதமர் விழாவை தொடக்கி வைக்க, விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பல்வேறு வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து, கபடி, கைப்பந்து, ஜூடோ, பளு தூக்குதல், வில்வித்தை, குத்துச்சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக இடம்பெற்றுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடியின் மூன்று நாள்கள் பயணத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, ராமேசுவரம், மதுரை ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் பிரதமரின் பாதுகாப்புக்காக சுமாா் 10,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனா். ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அனுமதிக்கப்பட உள்ளனா். பிரதமரின் வருகையையொட்டி, மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்புக்காக கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com