நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின், இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளி, ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி பலியானார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில், நைனார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் சொசைட்டி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கு பணிக்குச் சென்றிருந்தார். அவ்வாறு பணிக்கு சென்றவர், சுரங்கத்தில் இருந்து, வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி-யை சேமித்து வைக்கும் யார்டு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் ஹிட்டாச்சி வாகன மூலம் நிலக்கரியை சமன் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தபோது,ஹிட்டாச்சி ஆபரேட்டரின் கவனக்குறைவால், எதிர்பாராத விதமாக தொழிலாளி சக்கரவர்த்தி, ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள அனல் மின் நிலையம் மற்றும் சுரங்கப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பல்வேறு விபத்துக்கள், சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.