சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று (ஜன.25) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் இரண்டாம் நாளில் சினிமாவின் இலக்கு மற்றும் செயல்முறை குறித்து நடிகர் சித்தார்த் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், ''தன்னைத்தனே விரும்புவது மிகவும் முக்கியமானது. உங்கள் குரலை நீங்கள் கேட்கத்தொடங்கும்போதுதான் உங்களின் மேம்பட்ட தன்மை உங்களுக்குள் பிறக்கும்.
இளம் தலைமுறையினர் தாங்கள் விரும்புவதை செய்யலாம். ஒரே பாதையில் உங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
நான் இரண்டு வாரங்களில் தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டேன். தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளை கற்றுக் கொண்டேன். எந்தமொழியாக இருந்தாலும் அந்த மொழியை உள்ளூர் நபரைப் போன்று வட்டாரவழக்கில் பேச வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனது பிற மொழிப் படங்களிலும் நான் எனது சொந்த குரலில்தான் பேசுகிறேன். என் முந்தைய படங்களின் சாயலைப் போன்ற படங்களை நான் தொடர்ந்து எடுக்கமாட்டேன். தயாரிப்பாளராக, நடிகராக மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதனால், விரும்புவதை முழு மனதுடன் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் பயணமும் வேறுபட்டது. உங்கள் வாழ்க்கையை வாழ மறந்துவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டார்.