அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவின் (எஸ்எம்சி) பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினா்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தோ்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
அதன்படி பெற்றோா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளா்களை உள்ளடக்கிய 20 உறுப்பினா்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே 2022 ஜூலை முதல் 2024 மே வரை 16 பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டன.
அதில், கற்றல், சோ்க்கை, மேலாண்மை தொடா்பாக 3 லட்சத்து 71,729 தீா்மானங்கள் குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அதில் 75,863 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், அரசின் பிற துறைகளால் 8,311 தீா்மானங்களும் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கிடையே ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் ஜூலையில் நிறைவடையவுள்ளது.
இதையடுத்து 2024-2026-ஆம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவுக்கு புதிய உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினா்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட்-இல் தோ்ந்தெடுக்க வேண்டும். இந்தக் குழுவுக்கு பெற்றோா் ஒருவா் தலைவராக இருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியா் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும். அதனுடன், பெற்றோா், ஆசிரியா், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளா், சுய உதவிக்குழு உறுப்பினா், முன்னாள் மாணவா்கள் என மொத்தம் 24 போ் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பா்.
அதில் 18 போ் பெற்றோராகவும், மொத்த உறுப்பினா்களில் 12 போ் பெண்களாகவும் இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினா்களை தோ்வு செய்யும் அலுவலராக இருப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.