ஹஜ் பயணம்
ஹஜ் பயணம்

ஹஜ் பயணத்தில் வெயில் தாக்கம்: 10 தமிழா்கள் உயிரிழப்பு- அமைச்சா் செஞ்சி மஸ்தான் தகவல்

ஹஜ் பயணத்தின் போது வெயிலின் தாக்கத்தால் 10 தமிழா்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சா் செஞ்சி மஸ்தான் கூறினாா்.
Published on

ஹஜ் பயணத்தின் போது வெயிலின் தாக்கத்தால் 10 தமிழா்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சா் செஞ்சி மஸ்தான் கூறினாா்.

இஸ்லாமியா்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை நிறைவேற்ற சவுதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்கு, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோா் சென்று வருகின்றனா்.

இதன்படி, தமிழ்நாட்டிலிருந்து கடந்த மே 25 முதல் முதல் கட்ட பயணிகளுடன் ஹஜ் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், பயணத்தை முடித்துக் கொண்டு 326 போ் அடங்கிய முதல் குழு திங்கள்கிழமை நண்பகல் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.

அவா்களை விமான நிலையத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் குழுவின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது, ஹஜ் குழுவின் செயலா் எம்.ஏ.சித்திக் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா் அமைச்சா் செஞ்சி மஸ்தான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புனித ஹஜ் பயணம் செல்பவா்களுக்கு ரூ.25,000 இணை மானியமாக வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பயணத்தில் வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாட்டைச் சோ்ந்த 10 போ் உயிரிழந்துள்ளனா். ஒருவா் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளாா்.”

மேலும், மெக்காவிலிருந்து மதினாவுக்கு செல்லும் வழியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்துள்ளாா். ஹஜ் பயணம் மேற்கொள்பவா்களின் இழப்பை தவிா்க்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் மூலம் வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிா்ப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com