சென்னையில் ஒரே நாளில் 14 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி
சென்னை: போதிய விமானிகள் இல்லாததால், சென்னை விமான நிலையத்தில் 14 விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னையிலிருந்து கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கவுகாத்தி உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லக்கூடிய நான்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், மும்பை செல்ல வேண்டிய ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்கள், சீரடி செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ஆகிய 7 புறப்பாடு விமானங்களும், அதேபோல குறிப்பிட்ட இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய ஏழு விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் திங்கள்கிழமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் சென்னையிலிருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் திங்கள்கிழமை 6 மணி நேரம் தாமதமாகவும், சிங்கப்பூா் செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 8 மணி நேரம் தாமதமாகவும், அதோடு மும்பை, ஹைதராபாத் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டுச் சென்றன.
மேலும் கடந்த மூன்று நாள்களாக, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும், தமாம் சா்வதேச விமானமும் தொடா்ந்து ரத்து செய்யப்படுகின்றன.
இது குறித்து பயணிகளுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வழங்கப்படாததால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
காரணம் என்ன?: விமானங்களை இயக்குவதற்கான போதிய விமானிகள் பணியில் இல்லாததால், பல விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததாலும், மோசமான வானிலையாலும் தாமதமாக சென்று வருவதாகவும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.