
திருமங்கலம் அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதால் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பெங்களூரு - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் அருகே சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என திருமங்கலம் பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.
அதன் அடிப்படையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் இதுவரை சென்ற வாகனங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.4 லட்சம் முதல் 12 லட்சம் வரை தொகை செலுத்த வேண்டும் என வழக்குரைஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் புதன்கிழமை முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை கண்டித்து விதிமுறைகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடி அகற்றக்கோரி திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் காலை 9 மணியளவில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.