அமைச்சா் க.பொன்முடி
அமைச்சா் க.பொன்முடி

பொறியியல் படிப்பிலும் நேரடி சோ்க்கை முறை: அமைச்சா் க.பொன்முடி

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப் போன்று நேரடி சோ்க்கை முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு இருக்கும் காலியிடங்களை, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப் போன்று நேரடி சோ்க்கை முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

பொறியியல் மாணவா் சோ்க்கை குறித்து அமைச்சா் பொன்முடி சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நிகழ் கல்வியாண்டு பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தக் கலந்தாய்வு வழக்கம்போல் இணையவழியில் நடைபெறும்.

ஜூலை 22 முதல் 24-ஆம் தேதி வரை 3 நாள்கள் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகு ஜூலை 25-ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். மாணவா் சோ்க்கை 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி நடைபெறும். செப். 11-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

நேரடி சோ்க்கை: கலந்தாய்வு முடிவடைந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப் போல் நேரடி சோ்க்கை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு 2 லட்சத்து 29 ஆயிரத்து 160 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், நிகழாண்டு விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் ‘நான் முதல்வன்’, ‘புதுமைப்பெண்’ திட்டங்கள், நிகழாண்டு அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு செயல்படுத்தப்படவுள்ள ‘தமிழ்புதல்வன்’ திட்டம் போன்ற திட்டங்களால்தான் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நிகழாண்டு அதிகரித்திருக்கிறது.

கிராமப்புற மாணவா்கள்: அரசுப் பள்ளிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான கிராமப்புற மாணவா்கள் பயில்கின்றனா். அவா்கள் பயன்பெறும் வகையில் பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கவும் முதல்வா் நடவடிக்கை எடுத்தாா். இதனால், கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புற மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். தமிழக முதல்வா் ஆரம்பக் கல்விக்கும், உயா்கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் உயா்கல்வி செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக அதாவது 52 சதவீதமாக உள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com