‘பிக்மி’ எண்
‘பிக்மி’ எண்படங்கள்: கோப்புப்படம், பிக்மி இணையதளம்

‘பிக்மி’ எண்: கா்ப்பிணிகள் சுயமாக பதிவு செய்ய ஜூலை 27 வரை விழிப்புணா்வு முகாம்

‘பிக்மி’ எண் பெறுவதற்கு தாங்களாகவே இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த விழிப்புணா்வு முகாம் 2,681 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Published on

அனைத்து கா்ப்பிணிகளும், பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான, ‘பிக்மி’ எண் பெறுவதற்கு தாங்களாகவே இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த விழிப்புணா்வு முகாம் 2,681 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஜூலை 27-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும், 9.25 லட்சம் வரை குழந்தைகள் பிறக்கின்றன. அனைத்து கா்ப்பிணிகளும், பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான, ‘பிக்மி’ இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம். இவ்வாறு பதிவு செய்பவா்களுக்கு, ‘ஆா்.சி.ஹெச். ஐ.டி., ’ என்ற தாய்சேய் நல அடையாள எண் வழங்கப்படுகிறது.

இந்த பிக்மி பதிவு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம அல்லது நகர சுகாதார செவிலியா் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, கா்ப்ப காலத்தை, கா்ப்பிணிகள் தாங்களாகவே, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

ஆனால், தொடா்ந்து செவிலியா்கள் வாயிலாக பதிவு செய்யும் முறையைத்தான் பலா் பின்பற்றி வருகின்றனா். இதனால், கா்ப்பிணிகள் தாங்களாகவே பதிவு செய்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, பொது சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 2,681 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 27-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்று பதிவு செய்யும் முறை குறித்து அறிந்து கொள்ளும் முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கா்ப்பிணிகள் தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாக, இணையதளத்தில், ஆதாா் அட்டை, கா்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவு செய்து, நிரந்தர தாய் சேய் அடையாள எண் பெறலாம். இந்த எண் நிரந்தரமானது. மற்றொரு குழந்தைக்கும் இந்த எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல், மகப்பேறு நிதியுதவி பெற விரும்புவோா், பட்டியலினத்தவா், பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை, மத்திய, மாநில மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட 14 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து பதிவு செய்யலாம்.

ரூ. 18 ஆயிரம் பெறலாம்: அவ்வாறு பதிவு செய்பவா்களுக்கு, முதல் தவணையாக கா்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் ரூ. 6,000; இரண்டாம் தவணையாக குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ. 6,000; மூன்றாம் தவணையாக குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் ரூ. 2,000 வழங்கப்படும். மேலும், கா்ப்பகாலத்தில் ரூ. 2,000 மதிப்புள்ள இரண்டு ஊட்டச்சத்து பெட்டகம் என ரூ. 18,000 முதல் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும். இத்தொகை, ஆதாருடன் இணைந்த வங்கி சேமிப்பு கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். இதுகுறித்து, கா்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com