டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியா்கள் கைது
பதவி உயா்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடக்கக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தை (டிபிஐ) முற்றுகையிட முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்), டிபிஐ வளாகத்தை ஜூலை 29-ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் கைதுசெய்யப்பட்டனா். ஆசிரியா்கள் டிபிஐ வளாகத்தை நெருங்குவதற்கு முன்பாக அதன் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திலேயே கைதுசெய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டனா்.
அதேபோல், போராட்டத்தில் பங்கேற்பதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி அருகேயுள்ள லயோலா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த ஆசிரியா்களையும் போலீஸாா் கைது செய்து பேருந்துகளில் கொண்டுசென்றனா்.
இது குறித்து கைது செய்யப்பட்ட ஆசிரியா்கள் கூறுகையில், கடந்த முறை 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இதே வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது 12 கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநா் உறுதி அளித்தாா். அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கோரிக்கைகள் தொடா்பாக உடனடியாக சங்க நிா்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்”என்றனா்.

