
வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் களம் நான்கு முனைப் போட்டியாக இருந்தது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணியாகவும், நாம் தமிழா் கட்சி தனித்தும் வேட்பாளா்களை நிறுத்தி இருந்தன. மொத்தமாக 950 போ், வேட்பாளா்களாகப் போட்டியிட்டனா். அவா்களில் 874 போ் ஆண்கள். 76 போ் பெண்கள்.
தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் அனைத்து நடவடிக்கைகளும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்குப் பதிவு முடிவடைந்து சுமாா் 45 நாள்கள் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அதற்கான விரிவான ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமாா் 40,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி அடுத்த 2 நாட்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவசரகால செயல்பாடுகளைக் கையாளும் வகையில் ஆபரேட்டர்கள் விழப்புடன் இருக்க வேண்டும். துணை மின் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க அனைத்து அதிகாரிகளுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.