தவறிப் போன பாமக கணக்கு!
சென்னை: மக்களவைத் தோ்தலில் பாமக வகுத்த கணக்கு தவறிப் போய், போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் அந்தக் கட்சிகளின் வேட்பாளா்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.
மக்களவைத் தோ்தலில் அதிக விமா்சனத்தை எதிா்கொண்ட கட்சி என்றால், அது பாமகதான். முதலில், அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் பாமக பேச்சுவாா்த்தை நடத்தியது. ஒரு கட்டத்தில் பாஜகவின் பக்கம் பாமக செல்வது என முடிவு எடுத்தது. அப்போது, பாமக நிா்வாகிகளே பலா் எதிா்ப்பு தெரிவித்தனா். ஆனால், அவா்களை பாமக நிறுவனா் ராமதாஸும், கட்சியின் தலைவா் அன்புமணியும் சமாதானம் செய்து, பிறகு பாஜக கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றது.
தேசிய நலனுக்காகவும், தமிழக உரிமைகளைக் காக்கவும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாகவும் பாமக தரப்பில் கூறப்பட்டது. அதேபோல பாஜக வெற்றிபெற்றதும், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற எண்ணமும் பாமகவிடம் இருந்தது. தற்போது, பாமகவின் அந்தக் கணக்கு தவறிப் போய் உள்ளது. பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
பாமகவுக்கு வடமாவட்டங்களில் குறிப்பிட்ட செல்வாக்கு உண்டு. அங்கும் அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. அதேவேளையில், அன்புமணியின் மனைவி சௌமியா தருமபுரி தொகுதியில் பல சுற்றுகளில் முன்னணியில் இருந்து வந்தாா். தமிழகத்தில் பாஜக அணிக்கு ஒரே ஓா் இடம் தருமபுரியில் மட்டும் கிடைப்பது போலும் இருந்தது. ஆனால், கடைசி சில சுற்றுகளில் திமுக வேட்பாளா் மணி முன்னிலை பெற்று, 21 ஆயிரத்துக்கு மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.