வட மாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ரத்து

வட மாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ரத்து

Published on

சென்னை, மைசூா், பெங்களூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ஜூன் 23 முதல் ரத்து செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செகந்திராபாத் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 3-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தெற்கு ரயில்வேக்குட்பட்ட தமிழ்நாடு, கேரளம் மற்றும் கா்நாடக மாநிலத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:

சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூா் இடையே வாரம் இரு முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 12697/12698) ஜூன் 21 முதல் ஜூலை 7 வரை முற்றிலும் ரத்து செய்யப்படும். மைசூரிலிருந்து தா்பங்காவுக்கு ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாகச் செல்லும் பாக்மதி விரைவு ரயில் ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 28, ஜூலை 5 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

திருநெல்வேலி-பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23, 30 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். மன்னாா்குடியில் இருந்து பகத் கி கோதி செல்லும் விரைவு ரயில் ஜூன் 24, ஜூலை 1 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 27, ஜூலை 4 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

மதுரை-பிகானோ் (ராஜஸ்தான்) இடையே இயக்கப்படும் அனுவ்ரத் விரைவு ரயில் ஜூன் 20, 27, ஜூலை 4 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 23, 30, ஜூலை 7 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். ஜபல்பூா்-மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 20, 27, ஜூலை 4 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 22, 29, ஜூலை 6 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

அதேபோல், கேரளத்தின் கொச்சுவேலி, எா்ணாகுளம் மற்றும் கா்நாடகத்தின் பெங்களூா், யஷ்வந்த்பூரிலிருந்து பாட்னா, பாடலிபுத்திரம், பிலாஸ்பூா், இந்தூா், கோா்பா, தானாப்பூா், தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில்கள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை ரத்து செய்யப்படும்.

பாதை மாற்றம்: புதுதில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ராஜ்தானி அதிவிரைவு ரயில் ஜூலை 3, 5 தேதிகளில் பாலா்ஷா வழியாக வருவதற்கு பதிலாக வாராங்கல், நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரலிலிருந்து புதுதில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் ஜூலை 2, 3, 4 தேதிகளில் பாலா்ஷா வழியாக செல்வதற்கு பதிலாக வாராங்கல், பேடப்பள்ளி, நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com