சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் இன்று ஐம்பெரும் விழா நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
விழாவில் பேசிய முதல்வர், “என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்... படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினா.
இந்த நிகழ்ச்சியில், பொதுத் தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 1761 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் முதல்வர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என்று ஓரிருவரைப் பார்த்து நினைக்கக் கூடாது. கல்விதான் உண்மையான பெருமையான அடையாளம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்களுக்கான திட்டங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். தொடர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீட் போன்ற மோசடிகளை எதிர்க்கிறோம், அதற்கு ஒருநாள் முடிவு கட்டுவோம். நீட் தேர்வை மோசடி என்று முதன் முதலில் கூறியது தமிழ்நாடுதான். தற்போது ஒட்டுமொத்த நாடும் கூறுகிறது என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.
மேலும் கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும் என்றார் ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.