
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தனியார் நாட்டு பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் உரிமையாளரின் மகன் பலியானார்.
மன்னார்குடி தாமரைக்குளம் வடகரையைச் சேர்ந்த மறைந்த மனோகரன் மனைவி விஜயலெட்சுமி, மூத்தமகன் செல்வகுமார் ஆகியோருக்கு சொந்தமான நாட்டு பட்டாசுகள் தயாரிப்பு ஆலை, மாதா கோயில் தெரு கர்த்தநாதபுரத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் மேற்கூரை தகர சீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு செட்டில் பட்டாசு தயாரிப்பும் மற்றொறு செட்டில் பட்டாசுகள் இருப்பும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மனோகரனின் மற்றொரு மகன் சதீஷ்குமார்(35), பணியாளர் கர்த்தநாதபுரத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் அருண்குமார்(19) ஆகிய இரண்டு பேர் மட்டும் வேலைபார்த்து வந்தநிலையில், மதியம் பட்டாசு தயாரிக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கு இருந்த சதீஷ்குமார், அருண்குமார் ஆகியோருக்கு பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சதீஷ்குமார் பலியானார். அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மன்னார்குடி ஊரக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து மேல்விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.