ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைத்து தரும் கட்சிகளுக்கே எங்கள் ஓட்டு என்ற தட்டி(பேனர்) வைத்து ஊர் மக்கள் அறிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட்டை கடந்துதான் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்லவேண்டிய சூழல் உள்ளது.
இந்த நிலையில், காலை நேரத்தில் ரயில்வே கேட்டை மூடினால், திறப்பதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில்வே கேட்டிற்கு சிறிது தொலைவில் வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே சுரங்கப் பாதை இருந்தும் அது பாழடைந்து கிடப்பதால் அதனை சீரமைத்து தரும்படி பல முறை ரயில்வே அதிகாரிகளுக்கும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என மக்கள் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ள கிராம மக்கள், மக்கள் சிரமமின்றி செல்வதற்கு சுரங்கப் பாதையை சீரமைத்து தரும் கட்சிகளுக்கே எங்கள் ஓட்டு என்ற கோரிக்கை தட்டி(பேனரை) வைத்துள்ளனர்.
அதாவது, "அரசியல் கட்சிகளுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்" என்ற தலைப்பில் ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைத்து தருபவர்களுக்கே எங்கள் ஓட்டு என்று தட்டி வைத்து அறிவித்துள்ளனர்.
நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.