ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் புலிகள் காப்பகத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை தாம் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு இது குறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் மிக உருக்கமான தகவலை பதிவிட்டுள்ளார்.
அதில், மிகவும் தைரியமான தாய் யானை, தனது கடைசி மூச்சு வரை போராடியது. மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு கால்நடை மருத்துவர்கள், நிபுணர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு தாய் யானையின் உயிரைக் காக்க தீவிரமாக போராடினர். எனினும், தாய் யானையின் உயிரைக் காக்கும் போராட்டத்தில் இன்று தாய்யானை மரணமடைந்தது. எங்கள் இதயம் உடைந்து சுக்குநூறானது என்று பதிவிட்டுள்ளார்.
சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் - பண்ணாரி சாலையில் உள்ள பள்ளத்தில் பெண் யானை ஒன்று நிற்க முடியாமல் படுத்திருப்பது குறித்து வனத்துறை ஊழியர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக, யானைக்கு சிகிச்சையளிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானையை பரிசோதித்தனர். பிறந்த 2 மாதங்களே ஆன யானை குட்டி ஒன்று, பெண் யானையை சுற்றி சுற்றி வந்ததால், சிகிச்சையளிக்க முடியாமல் போனது. இதனால், குட்டி யானை சற்று தொலைவில் கொண்டு செல்லப்பட்டு அது கால்நடை மருத்துவர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டது.
பிறகுதான், பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வனத்துறையினருக்கு மிகவும் கடினமான காலம் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் பெண் யானையின் உடல்நிலையை சீராக்க கடுமையாகப் போராடினர். எனினும் எதுவும் பலனளிக்கவில்லை.
சத்யமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் பெண் யானை இயல்பாக எழுந்து நிற்க முடியாத நிலையில், உணவருந்தவும் முடியாமல் இருந்தது.
இந்த நிலையில், அதன் உடல்நிலையை சீராக வைக்க அவ்வப்போது குளிக்க வைக்கவும், உணவு சாப்பிட முடியாததால் அதற்கு குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் நீர்ச்சத்து குறையாமல் காக்கவும் வனத்துறையினர் போராடி வந்தனர்.
தொடர்ந்து வனத்துறையின் குழுவினர் யானையின் உடல்நிலையை கண்காணித்துக்கொண்டே இருந்தனர். எனினும், இன்று உயிர் போராட்டத்தில் யானை தனது கடைசி மூச்சை விட்டுவிட்டது.
இந்த யானையின் இரண்டு மாத பெண் யானைக் குட்டி தற்போது கால்நடை மருத்துவர்களின் பராமரிப்பில் உள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் பெண் யானை இறந்துவிட்டதால், முகாமுக்கு அழைத்துச் சென்று பராமரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.