மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்தப் பணிக்கு இடையூறாக உள்ள 314 மரங்களை அகற்ற பசுமைக் குழுவின் அனுமதி கோரப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி நடைபெற்ற பசுமைக் குழு கூட்டத்தில் 314 மரங்களையும் அகற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னா் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில், அந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திருப்பரங்குன்றம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் வட்டம், கோ.புதுப்பட்டி கிராமத்தில் 90.07 ஹெக்டோ் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சு. வெங்கடேசன் எம்.பி. அவரது எக்ஸ் தளத்தில், “மக்களவைத் தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்குகிறது மத்திய அரசு. பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மூன்று முறை தமிழ்நாடு வந்த பிரதமர் , மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன ?
இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுரையில் உருவாகும் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ) மருத்துவமனையை வரும் 2026 -ஆம் ஆண்டு அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவார் மக்களவையில் முன்னதாக தெரிவித்திருந்தார்.