

சென்னை பெருநகர மெட்ரோ ரயில் பணிகளுக்காக வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை ஐ.சி.எஃப். அருகேயுள்ள காலியிடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இவ்வழித்தடத்தில் பயணிகள் அதிகளவில் வந்துசெல்லக் கூடிய முக்கிய நிலையமாக வில்லிவாக்கம் பேருந்து முனைய மெட்ரோ ரயில் நிலையம் அமையும்.
இங்கே நிலத்துக்கு அடியில் 15 மீட்டர் ஆழத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
வில்லிவாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில், தற்போது மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், மெட்ரோ பணிகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படும்பட்சத்தில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்து சேவைகள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுமென்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐசிஎஃப் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்து போக்குவரத்துக் கழகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் படிப்படியாக புதிய இடத்திற்கு மாற்றப்படும். இதற்கு சுமாராக 3 மாத கால அவகாசம் தேவைப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தட எண்கள் 22, 27, 47 ஆகிய பேருந்துகள் வழக்கம்போல வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும் என்று தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.