கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக சரத்குமார் அறிவித்தார்.
சரத்குமார் தரப்பில் இருந்து பாஜகவிடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் இன்று சந்தித்துள்ளார்.
பாஜக - சமக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் பாஜக குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. நேற்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் பாஜக குழு பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.