தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் நேற்று(மார்ச். 11) அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கேரளம், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் இச்சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று(மார்ச்.12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், தமிழகத்தில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில், தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தேவையற்றது என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டுமென்பதே அரசின் கருத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் தமிழக அரசு இடமளிக்காது எனவும், மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இச்சட்டம் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் கூறுவது என்ன?: அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.