பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்தது, பின்னர் ஒரு மணி நேரத்திற்குள்ளாக திடீரென விநாடிக்கு 2500 கன அடியாக சரிந்தது.
இரு மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து கடந்த சில மாதங்களாக விநாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்களாக காட்சியளித்தன. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நீரானது புதன்கிழமை காலை தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 5,000கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது 8 மணி நிலவரப்படி திடீரென குறைய தொடங்கிய நிலையில் விநாடிக்கு 2500 கன அடியாக நீர்வரத்து மீண்டும் சரிந்துள்ளது.
மேலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.