விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தனக்கு மகன் மாதிரி என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், விருதுநகரின் பிரசாரத்தில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“விருதுநகர் தொகுதி நாங்கள் கேட்டு கொடுக்கப்பட்டதில்லை. பாஜக தலைமை போட்டியிட சொன்னது. இந்த தொகுதி எங்களுக்கு புதியதில்லை, ஏற்கெனவே பலமுறை பிரசாரத்திற்காக வந்துள்ளோம்.
விஜய பிரபாகரன் எனது மகளுடன் படித்தவர். எனக்கும் மகன் போன்றவர். அவர் நலமுடன் இருக்க வேண்டும், வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு பெரிதாக வந்து மக்களை சந்தித்தது இல்லை என்ற புகார் உள்ளது.” எனத் தெரிவித்தார்.