மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதுபோல, வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
பம்பரம் சின்னத்தை ஒதுக்கத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மதிமுகவின் மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என்றும், பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய மதிமுகவின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும், அங்கீகரிக்கப்படாத கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் ஒரே சின்னம் வழங்கப்படும் என்றும், பம்பரம் பொதுச் சின்னம் மற்றும் ஒதுக்கப்பட்ட சின்னத்தின் பட்டியலில் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தொடர்ந்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம், நாளை காலை 9 மணிக்குள் மதிமுக கோரிக்கை மீது முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.