ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனது முழு ஆதரவினை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் சின்னம், கொடி உள்ளிட்டவை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'ஒ' இன்ஷியல் கொண்ட மற்றொரு பன்னீர்செல்வமும் அதே சின்னம் கேட்ட நிலையில், குலுக்கல் முறையில் ஓபிஎஸ்-க்கு பலாப்பழம் சின்னத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுசந்திரன் ஒதுக்கீடு செய்தார்.
அதேசமயம் ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக களம் காண்பதால், ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.