சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் செல்ல மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல மலையடிவாரத்திலிருந்து சுமார் 1,306 படிக்கட்டுகள் மலை படியேறி லட்சுமி நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும்.
பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கடந்த மார்ச் மாதத்தில் ரோப்கார் சேவையைத் தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வதற்காக பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இன்று காலை மலையேறி வந்துள்ளார். ஒருகட்டத்தில் கோயிலுக்கு அருகில் அதாவது 1200-வது படியில் ஏறிவரும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பராமரிப்பு காரணமாக ரோப் கார் சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.