ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையாக வீசிய வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது.
வெயில் தாக்கம் தாங்க முடியாமல் நண்பகல் 12 மணிக்கு மேல் மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைகின்றனர். மாலை 5 மணிக்கு பிறகே மக்கள் வெளியில் வருகின்றனர். இரவு நேரங்களில் அதிக புழுக்கம் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெயிலின் அளவு 109.04 ஃபாரன்ஹீட் பதிவானது.
இந்நிலையில், மாலை சுமார் 4.45 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் திடீரென சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
மாதனூர் அருகே கூத்தம்பாக்கம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. சாலையோர மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது.