தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மற்றொரு மோட்டார்சைக்கிளில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கனரக வாகனம் ஏறி இறங்கியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.
கடலூர் மாவட்டம் மஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷக்கீன், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவரும் மோட்டார்சைக்கிளில் புதன்கிழமை நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வியாழக்கிழமை மூவரும் கடலூருக்கு திரும்பிக் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தரங்கம்பாடி பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த தரங்கம்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது எதிரே வந்த கனரக வாகனம் கீழே விழுந்த மூவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியாகினர்.
அதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மற்றொரு வாகனத்தில் வந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்புப் படையினர் மற்றும் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.