கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

Published on

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில், தற்போது கோடை சீசன் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு படையெடுத்து வருகின்றனா்.

இதனால் குறுகிய நகரமான உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.

இ-பாஸ் எண்ணிக்கையில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும். ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தங்களது செல்போன் நம்பரை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com