கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் 17 இடங்களில் நேற்று (மே. 4) வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (மே 5) வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மிக 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மேலும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் இன்றைய வானிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "மீனம்பாக்கத்தில் இன்று(மே. 5) 106 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும். சேலம் ஏற்காடு, வால்பாறை, கொடைக்கானல், தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பகுதிகளில் முதலிடத்தில் இருந்த கரூரில் மழை பெய்ய 50 சதவிகிதம் வாய்ப்புள்ளது. ஈரோடு அல்லது கரூரை விட வேலூரில் அதிகபட்ச வெப்ப நிலை இன்று பதிவாகலாம்." என்று பதிவிட்டுள்ளார்.