தமிழகத்தில் அடுத்த 5 நாள்களில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 10) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்ப அலை முன்னெச்சரிக்கை
அடுத்த 5 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.
தமிழக உள் மாவட்டங்களில் மே 8 முதல் 12 வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40-41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38-39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-37 டிகிரியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை
கேஆர்பி அணை, கீழ்பென்னாத்தூர் தலா 9, மேலாலத்தூர், செங்கம் தலா 7, கஞ்சனூர், நெடுங்கல், மேட்டூர் தலா 5, ஒகேனக்கல், வேலூர், குடியாத்தம் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்ப அலை
அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 செல்சியஸ், திருச்சியில் 41.5, மதுரையில் 41.2, ஈரோட்டில் 40.8 ஆகவும், திருத்தணியில் 40.1 செல்சியஸ் ஆகவும் பதிவானது.