சென்னை: சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சி என இரண்டையுமே சமாளிக்கும் வகையில், 200 நீர்நிலைகளை இணைக்கும் திட்டத்தை மேற்கொள்ள தமிழக நீர்வளத் துறை முடிவெடுத்துள்ளது.
அடையாறு மற்றும் கோவளம் கடற்கரையோரமுள்ள 200 நீர்நிலைகளை ஒன்றிணைத்துவிட்டால், மழைக்காலங்களில் வெள்ளத்தையும், வெயில் காலங்களில் வறட்சியையும் சமாளித்துவிடலாம் என்பது இவர்களது திட்டம்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் மழைக் காலங்களில் பெரு வெள்ளம் ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது, குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சென்னை மாநகரில் பெய்யும் பெருமழையின்போது, மழைநீரில் 90 சதவீதம் போதுமான நீர்த்தேக்க கட்டமைப்புகள் மற்றும் நீர்நிலைகளுக்கு இடையேயான இணைப்பு இல்லாததால் கடலில்தான் கலக்கின்றன.
எனவே, அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள 196 நீர்நிலைகளில் 134 நீர்நிலைகளும், கோவலம் கரையோரம் உள்ள 120 நீர்நிலைகளும், ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. வெட்டி, இணைக்கும் முறையின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் இந்த நீர்நிலைகளை ஒன்றிணைப்பது தொடர்பான ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
ஒரு நீர்நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலைக்கு கால்வாய் தோண்டி, அதற்காக நிலத்தை கையகப்படுத்துவதெல்லாம் ஆகாத வேலையென்றும், நிலத்தடிக்குள் குழாய் போன்று ஒரு மூடிய கால்வாய் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம், ஒரு நீர்நிலை நிரம்பியதும் அதன் மூலம் மற்றொரு நீர்நிலைக்கு தண்ணீர் செல்லும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படவிருக்கிறதாம்.
அதாவது இந்த மூடிய கால்வாய் அமைப்பினால், கால்வாய் நிலம் அபகரிப்பு செய்வதும் தவிர்க்கப்படும். இதனால், இப்பணிகள் வேகமாக செய்யப்படுவதுடன், செலவும் குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம், தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது, அனுமதி கிடைத்ததும், ஜப்பான் சர்வதேச ஒருங்கிணைப்பு அமைப்பின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னையின் நீர்த்தேவை என்பது, தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்துக்கு, தற்போது 22 டிஎம்சி கன அடியாக உள்ளது. இது மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் தொழிற்துறை வளர்ச்சி காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள் 28 டிஎம்சி கனஅடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம், நகரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நீர்நிலைகளை இணைப்பதன் மூலம், சென்னையின் நீர்த்தேக்க அளவை 13.22 டிஎம்சியிலிருந்து 17.22 டிஎம்சியாக அதாவது 5 டிஎம்சி அளவுக்கு அதிகரிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் வரலாற்றில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 3,600 நீர்நிலைகள் இருந்ததாகவும், ஆனால், தற்போது நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் வெறும் 1000க்கும் குறைவான நீர்நிலைகளே இருப்பதாகவும் கூறப்படுகிறது.