பென்னாகரம்: ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை நவீன மையப்படுத்தும் பணி மற்றும் பராமரிப்பு பணியின் காரணமாக இரண்டு மாதங்களாக காவிரியில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமை முதல் நீக்கப்பட்டதை அடுத்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு, அருவிகள், பாறை குகைகள், காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிப்பதை வாடிக்கையாகக் கொண்டனர். கடந்த சில மாதங்களாக நீர் பிடிப்புப் பகுதியில் மழையின்மை, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு முற்றிலும் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை நவீன முறையில் மேம்படுத்தும் வகையில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. பரிசல் துறை பகுதியில் பரிசல் நிறுத்துவதற்கான இடம் மற்றும் நடைபாதை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பராமரிப்பு பணியின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இருப்பினும் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துவிட்டு பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், தற்போது இரு மாநில காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் திடீரென பெய்து வரும் கோடை மழையின் காரணமாக ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பரிசல்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து, பரிசல் துறை பகுதியில் குவிந்தனர். பின்னர் மாமரத்துக் கடவுள் பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், பெரியபாணி வழியாக உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர்.