சென்னை: அட்சய திருதியை நாளை முன்னிட்டு, தங்கம் வாங்கினால் அதிக தங்கம் சேரும் என்ற நம்பிக்கையில், இன்று நகைக் கடைகளில் ஏராளமான பெண்கள் தங்க நகை வாங்க குவிந்துள்ளனர்.
அட்சய என்பதற்கு வளர்க என்று பொருள்படும் என்பதால், அட்சய திருதியை நாளில் செய்யும் செயல்கள் வளரும் என்பது நம்பிக்கை. அதன்படி, இன்று அதிக தான தர்மங்கள் செய்யவும், வீட்டுக்கு அவசியமான அரிசி, உப்பு மற்றும் மங்களகரமான பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதும் நமது முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது.
ஆனால், அண்மைக் காலமாக நகைக்கடைகளின் விளம்பரத்தினால், அட்சய திருதியை என்றாலே நகைக் கடைகளில் நகை வாங்குவது மட்டுமே நோக்கமாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படை வழக்கமே மாறிப்போயிருக்கிறது.
அந்த வகையில், இன்று நகைக் கடைகள் கொண்டாடும் அட்சய திருதியை நாள் என்பதால், தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடைக் காலம் என்பதால், நல்ல நேரம் பார்த்து பெண்கள் பலரும் காலையில் நகைக்டை திறந்ததுமே சென்று நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர்.
அட்சய திருதியை என்பதால், அதிகம் பேர் நகை வாங்குவார்கள் என்ற நிலையில், இன்று காலையிலேயே சென்னையில் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
அட்சய திருதியை முன்னிட்டு இன்று(மே 10) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது. அட்சய திருதியை என்பதால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் இருமுறை உயர்ந்துள்ளதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை ஒரு கிராம் ரூ. 6,630-க்கும், ஒரு சவரன் ரூ. 53,040-க்கும் விற்பனையானது. நேற்று (மே 9), வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 52,920-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
சிறிய நகைக்கடைகள் முதல் நகைக் கடைகள் அதிகம் இருக்கும் தி.நகர், புரசைவாக்கம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் சந்தைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நகைக்கடைகளிலும் இன்று காலை முதலே கூட்டம் அலைமோதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.