ஈரோடு: மாநில அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மூன்று நாள் யானைகள் கணக்கெடுப்பை தமிழ்நாடு வனத்துறை இன்று தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கி நடைபெறும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்து வனப்பகுதிகளில் யானைகளின் கணக்கெடுப்பை நடத்த சுமார் 300 வன அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க கணக்கெடுப்பாளர்களுக்கு துப்பாக்கி வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று தொடங்கிய இந்த இரண்டாவது கணக்கெடுப்பு, 697 வட்டாரங்களில் உள்ள 26 வனப் பிரிவுகளை உள்ளடக்கும் என்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார். அதே வேளையில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் ஒரே நேரத்தில் யானைகளின் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தனது சமூக ஊடக தளமான Xல் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் 2,961 யானைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் 1,836 வன ஊழியர்களும், 342 தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.
ஓசூர் முதல் கன்னியாகுமரி வரையிலான வனப்பகுதிகளை உள்ளடக்கிய யானைகள் கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் உள்ள 5 புலிகள் காப்பகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.