![தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., (மயக்க மருந்தியல்) பட்டப்படிப்பு படித்திட உதவி செய்து, அந்த கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.](http://media.assettype.com/dinamani%2F2024-05%2F31c41c43-1536-4b92-9eee-e44fa3d986ad%2FSrilankan_camp_pdk.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., (மயக்க மருந்தியல்) பட்டப்படிப்பு படித்திட உதவி செய்து, அந்த கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் சுசந்த அஜித்குமார் - மரியகிறிஸ்டின் தம்பதியரின் மகள்கள் செல்வி ஷரினாகிறிஸ்ட் மற்றும் செல்வி மெனிஷாகிறிஸ்ட் ஆகியோர் கைப்பேசி வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்கள். அவர்களின் இந்த செயலை பாராட்டி, கல்விக்கு பயன்படும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கையடக்க கணினிகளை (TAB) வழங்கி வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில், மாணவி சு. ஷரினாகிறிஸ்ட் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதையடுத்து மருத்துவத் துறையோடு தொடர்புடைய பாரா மெடிக்கல் பிரிவில் பி.எஸ்சி(மயக்க மருந்தியல்)பட்டப்படிப்பு படித்திட உதவிடுமாறு அந்த மாணவியின் தாயார் மரியகிறிஸ்டின் முதல்வருக்கு கடிதம் மூலம் கோரியிருந்தார்.
அதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், மாணவி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி (மயக்க மருந்தியல்) பட்டப்படிப்பு படித்திட உதவி செய்து, அந்த கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (மே 23) முகாம் அலுவலகத்தில் வழங்கினார். மேலும், அந்த மாணவிக்கு கலைஞர் எழுதிய திருக்குறள் உரை நூல் மற்றும் பேனாவையும் பரிசாக வழங்கி, வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, அந்த மாணவியின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.