
பழமையும், வரலாற்றுச் சிறப்பும்மிக்க காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் வைகாசி திருவிழா நிகழ் மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மே 22 ஆம் தேதி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் அதிகாலையில் ஆலயத்தில் இருந்து தேருக்கு எழுந்தருவினர். தேரில் அமர்ந்திருக்கும் பெருமாளை பக்தர்கள் ஏறிச் சென்று பார்க்க காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தேரினை குறு மற்றும் சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தேரோட்ட விழாவில் காஞ்சிபுரம் எம்.பி கா. செல்வம் ,மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் செ. வெங்கடேஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் ரா. வான்மதி , உதவி ஆணையர் லட்சுமி காந்தன், மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் எஸ் .கே. பி. கோபிநாத் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தேர் வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அண்ணா திமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் .பா.கணேசன் அதிமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராஜசேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கே.யு.சோமசுந்தரம் , எஸ் எஸ். ஆர். சத்யா, எஸ் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.
தேர் வரும் வழிநெடுகிலும் திரளான வணிக நிறுவனங்கள் நீர்,மோர் வழங்கியதுடன் அன்னதானமும் வழங்கினார்கள். தேரோட்டத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தேர் திருவிழாவில் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி, எஸ். பி. கே சண்முகம் ஆகியோர் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.