

காஞ்சிபுரம் மாவட்டத்தி உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தாலும் பாதுகாப்பாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
எனவே, செம்பரம்பாக்கம் ஏரியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், செம்பரம்பாக்கம் ஏரி குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதில், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. அதில் தேவைக்கேற்ப உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனினும் ஏரியின் நீர்மட்டம் தற்போது பாதுகாப்பான அளவில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மற்றும்செம்பரம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதுவரை அனைத்துப் பகுதிகளும் அதிகாரிகளால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. தற்போது இதன் நீர்மட்டம் 19.31 அடியாக உள்ளது. மொத்த நீர் கொள்ளவு 3.645 டிஎம்சி. தற்போது நிரம்பியிருக்கும் நீரின் அளவு 2.268 டிஎம்சி.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 4,800 கன அடியாக நீர்வரத்து உள்ளது. தற்போது 134 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கத்திலிருந்து அதிகளவில் நீர்திறக்கப்பட்டால், அது திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், மணப்பாக்கம் வழியாக, சென்னையின் முக்கிய பகுதியான ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரம் அடையும். எனவே, கனமழை பெய்யும் நாள்களில் செம்பரம்பாக்கம் நீர்மட்ட நிலவரம், இப்பகுதி மக்களின் கவலையாக இருப்பது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.